2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை என்றும், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடிப்படையில் நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்றார். இந்தநிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை பொறுத்தவரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையிலுள்ள அட்டவணையின்படியே எவ்வித மாற்றமும் இன்றி தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.