'கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சை முறைகள் குறித்து, இணையதளத்தில் உலா வரும் தவறான தகவல்களை, பொதுமக்கள் நம்ப வேண்டாம்' என, சென்னையில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் இயக்குனர், மீனாகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எந்த காய்ச்சலாக இருந்தாலும், சித்த மருத்துவத்தில் உள்ள, 64 வகையான காய்ச்சல்களில் ஒன்றாகவே கருதப்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதிப்பை, 'ஐயஜூரம், சந்நிபாத ஜூரம்' என்று கணித்து சிகிச்சை அளிக்கலாம்.அதன்படி, 'பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திரிதோடம்' என, மூன்று வகையான சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தினசரி இரண்டு நேரம், தேனில் கலந்து நோயாளிகளுக்கு கொடுக்கலாம். அதேபோல், 'விஷஜூர குடிநீர், கபஜூர குடிநீர், நொச்சி குடிநீர்' ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, நோய் பாதிக்கப் பட்டோருக்கு, தினமும், 30 மில்லி அளவில் கொடுக்கலாம். எனினும், இந்த மருந்துகளுக்குரிய, முறையான மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த மருந்துகளை தவிர, இணையதளத்தில் உலா வரும் தவறான தகவல்கள், அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'கொரோனா'வுக்கு சித்தாவில் மருந்து?