பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக ஒத்துழைப்பு: பிரதமர் மோடி.....

 



                  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயங்கரவாதம் பொதுவான பிரச்னையாக உள்ளது. இதற்கு எதிரான போரில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் என, இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்த பின் பிரதமர் மோடி கூறினார்.

                  இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக, நேற்று (பிப்.,07) இந்தியா வந்தார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (பிப்.,08) டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட அதிகாரிகள் முழு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.


                  மோடி மற்றும் ராஜபக்சே இடையேயான சந்திப்பின் போது இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. வர்த்தகம், முதலீடுகள் குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவும், இலங்கை நெருங்கிய நட்பு நாடுகள். நமது உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சர்வதேச விவகாரங்கள் குறித்தும், பொருளாதார திட்டங்கள், வர்த்தகம் முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இலங்கையின் வளர்ச்சிக்கு, இந்தியா தனது பங்களிப்பை செய்துள்ளது.